செய்திகள்
பிடிபட்ட முதலை

காட்டுமன்னார் கோவில் அருகே பொது மக்களை பயமுறுத்திய முதலை சிக்கியது

Published On 2017-11-08 15:41 IST   |   Update On 2017-11-08 15:41:00 IST
காட்டுமன்னார் கோவில் அருகே நந்திமங்கலம் ஏரியில் பொது மக்களை பயமுறுத்திய வந்த முதலையை வனத்துறையினர் நேற்று பிடித்தனர்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனால் அந்த பகுதியில் உள்ள விளை நிலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வருகிறது. ஏரி, குளம் மற்றும் கண்மாய்களில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதில் ஏராளமான முதலைகள் தண்ணீரில் அடித்து வரப்பட்டுள்ளன. அவை பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது .

இந்நிலையில் நேற்று காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள நெய்வாசல் கிராமகுளம் மற்றும் நந்திமங்கலம் ஏரியில் முதலை நடமாட்டம் இருப்பதாக சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனக்காப்பாளர் கஜேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் நெய்வாசல் கிராமத்துக்கு விரைந்து சென்று முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். குளத்தில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் முதலையை பிடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து வனத்துறையினர் அங்கிருந்து நந்தி மங்கலம் ஏரிக்கு சென்றனர். அங்கு நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் ஏரியில் இருந்த 6 அடி நீளம், 100 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்தனர். பின்னர் அந்த முதலையை வக்காரமாரி நீர்த்தேக்கத்தில் விட்டனர். மேலும் குளத்தில் கிராமத்தினர் யாரும் இறங்க வேண்டாம் என தாசில்தார் ஜெயந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News