கடலூர் அருகே மழை வெள்ளத்தால் தரைப்பாலம் உடைந்தது
கடலூர்:
கடலூரை அடுத்த ஓட்டேரி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்கள் கடலூருக்கு வந்து செல்வதற்கு கெடிலம் ஆற்றில் மணலால் ஏற்படுத்தப்பட்ட பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கெடிலம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதனால் ஓட்டேரி பாலம் மழைநீரால் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடலூருக்கு வர முடியாமல் தவித்தனர்.
பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை புகார் கூறினர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மரத்தினால் தற்காலிக பாலத்தை ஏற்படுத்தினர்.
இந்த தரைப்பாலம் முற்றிலும் சேதமாகாமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயிர்சேதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.