பருவ மழையை எதிர்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை
புதுச்சேரி:
புதுவையில் வட கிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது. கடந்த ஒரு வார காலமாக புதுவையில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் பருவ மழையை எதிர் கொள்வது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் இன்று நடந்தது.
கூட்டத்துக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சி வாயம், ஷாஜகான், கந்த சாமி, கமலக்கண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, கலெக்டர் சத்யேந்தர்சிங், அரசு செயலாளர்கள், இயக்குனர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மழை காலத்தில் எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த காலங்களில் மழை தேங்கிய இடங்களில் தற்போது மழைநீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டது.