செய்திகள்

அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு உறுப்பினர் சேர்ப்பதாக கூறி பல லட்சம் மோசடி: போலி ரசீதுடன் விவசாயி கைது

Published On 2017-10-24 21:48 IST   |   Update On 2017-10-24 21:48:00 IST
அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு உறுப்பினர் சேர்ப்பதாக கூறி பல லட்சம் மோசடி போலி ரசீதுடன் விவசாயி கைது
கோபி:

அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு உறுப்பினர் சேர்ப்பதாக கூறி பல லட்சம் மோசடி செய்த விவசாயி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த போலி ரசீது, போலி பாஸ்புக் மற்றும் அவர் வந்த ஆம்னி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் சேவூரில் வசித்து வருபவர் கண்ணப்பன் (வயது 63). விவசாயி. இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் கூடங்குளம். தற்போது திருப்பூர் சேவூரில் வசிக்கும் இவர் ஒரு ஆம்னி வேன் மூலம் ஈரோடு மாவட்டம் கோபி பகுதிக்கு வந்தார். பிறகு கோபி அடுத்த கொளப்பலூருக்கு சென்றார்.

அந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடம் நான் அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு உறுப்பினர்களை சேர்த்து வருகிறேன். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை கொண்டு வந்தே தீர வேண்டும் என்று கூறி உறுப்பினர் ரசீது கொடுத்தார்.

ரசீது கொடுத்த விவசாயிகளிடம் அவர்களின் வசதிக்கேற்ப 100 ரூபாய், 1000 ரூபாய், 5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என வசூல் செய்துள்ளார்.

ஏற்கனவே அப்பகுதியில் உள்ள அத்திக்கடவு- அவினாசி திட்ட உறுப்பினர்களுக்கு கண்ணப்பன் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் துரிதமாக செயல்பட்டு அவரை பிடித்தனர்.

அவரிடம் விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். எனவே அவரை விவசாயிகள் கொளப்பலூர் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது கண்ணப்பனிடம் போலி பாஸ்புக், போலி ரசீது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் போலி ரசீது மூலம் விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்ப்பதாக கூறி பல லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்திருப்பது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து போலி ரசீது, போலி பாஸ்புக் மற்றும் அவர் வந்த ஆம்னி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News