செம்பனார்கோவிலில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை,பணம் கொள்ளை
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் ஆறு பாதி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி (வயது 62). ஓய்வுபெற்ற தபால் அலுவலர்.
இவரது மகன் கும்பகோணத்தில் வசித்து வருகிறார். இதனால் மகனை பார்க்க வீட்டை பூட்டி விட்டு சுந்தரமூர்த்தி நேற்று சென்றார்,
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இவரது வீட்டில் பின்பக்கம் வழியாக மர்ம கும்பல் உள்ளே நுழைந்தனர். அங்கு வீட்டில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரொக்க பணம் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
இதையடுத்து சுந்தரமூர்த்தியின் பக்கத்து வீட்டில் சேகர் என்பவரின் வீட்டிலும் கொள்ளை கும்பல் நுழைந்தனர்.
அங்கு வீட்டில் இருந்த 8 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.
அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து செம்பனார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் நாகையில் இருந்து மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
கொள்ளை நடந்த 2 வீடுகளும் செம்பனார்கோவில் போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ளன. இதனால் கொள்ளையர்கள் துணிச்சலாக கைவரிசை காட்டிய சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.