செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ரெயில்வே ஊழியர் பலி

Published On 2017-10-11 20:37 IST   |   Update On 2017-10-11 20:37:00 IST
கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் ரெயில்வே ஊழியர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள களமாவூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 38). ரெயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று களமாவூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் கீரனூருக்கு வந்தார். அங்கு வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கீரனூர் அருகே எதிரே வந்த லாரி ஒன்று எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல்ராயப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான ஜெயக்குமாருக்கு, திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள், ஒருமகன் உள்ளனர்.

Similar News