செய்திகள்

மரத்தில் கார் மோதியதில் நண்பர்கள் 3 பேர் பலி

Published On 2017-10-01 16:40 GMT   |   Update On 2017-10-01 16:40 GMT
புதுக்கோட்டை அருகே மரத்தில் கார் மோதியதில் நண்பர்கள் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
நார்த்தாமலை:

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள மேலத்தானியம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவருடைய மகன் சதாம் உசேன்(வயது 28), அதே பகுதியை சேர்ந்த உதுமான் மகன் அசாருதீன் (25), இக்பால் மகன் ராசித்அலி (25). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இந்நிலையில் 3 பேரும் நேற்று சொந்தவேலை காரணமாக புதுக்கோட்டைக்கு காரில் செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி ஒரு காரில் மேலத்தானியத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்தனர். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு, அதே காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். புதுக்கோட்டை பெருமாநாடு அருகே உள்ள செல்லுகுடி விளக்கு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் காரில் வந்த 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காரின் இடிபாடுகளில் சிக்கி பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் வந்த 3 பேரும் இறந்து போனதால் காரை ஓட்டி வந்தவர் யார் என்ற விவரம் தெரியவில்லை.

இந்த விபத்து குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கார் விபத்தில் இறந்த சதாம் உசேன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளதும், அவர் விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது விபத்தில் சிக்கி பலியானதும் தெரியவந்தது. மேலும் ராசித்அலி மொபைல் கடை நடத்தி வந்ததும், அசாருதீன் புதுக்கோட்டையில் ஐ.ஏ.எஸ். அகாடமி நடத்தி வந்ததும் தெரியவந்தது. ஒரே ஊரை சேர்ந்த நண்பர்கள் 3 பேரும் கார் விபத்தில் பலியான சம்பவம், மேலத்தானியத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News