செய்திகள்

மோசடி வழக்கு: கோவை கோர்ட்டில் இடைதரகர் சுகேஷ் இன்று ஆஜர்

Published On 2017-09-28 06:41 GMT   |   Update On 2017-09-28 06:53 GMT
டெண்டர் மோசடி வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் இன்று இடைத்தரகர் சுகேஷ் கோவை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
கோவை:

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் பெற்ற புகாரில் இடைத்தரகர் சுகேசை டெல்லி போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் கடந்த 2010-ம் ஆண்டு கோவை கணபதியை சேர்ந்த ராஜகோபால் என்பவரிடம் இடைத்தரகர் சுகேஷ் டெண்டர் எடுத்து தருவதாக கூறி ரூ. 2 லட்சம் பெற்று மோசடி செய்தார். இது குறித்து ராஜ கோபால் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இடைத்தரகர் சுகேஷ் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த சுகேசின் தந்தை சந்திரசேகர் ராவ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோவை ஜே.எம். 2 கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

வழக்கு விசாரணையின் போதே சுகேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்னர் நடந்த விசாரணையில் சுகேஷ் ஆஜராகவில்லை. எனவே கோவை கோர்ட் கடந்த ஜனவரி 1-ந் தேதி சுகேசுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

இதனையடுத்து திகார் சிறையில் உள்ள இடைத்தரகர் சுகேசை டெல்லி போலீசார் கடந்த ஜூன் 8-ந் தேதி பலத்த பாதுகாப்புடன் ரெயில் மூலம் அழைத்து வந்து ஜே.எம். 2-ல் ஆஜர் படுத்தினர்.

தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக அவரை டெல்லி போலீசார் அழைத்து வந்து ஆஜர் படுத்தி வருகின்றனர்.

கடைசியாக கடந்த 14-ந்தேதி சுகேசை ஜே.எம்.2-ல் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்குமார் இன்று சுகேசை ஆஜர் படுத்தும் படி உத்தரவிட்டர். இதற்காக டெல்லி போலீசார் இடைத்தரகர் சுகேசை டெல்லியில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் காலை 6.55 மணிக்கு கோவைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் காலை 10.30 மணிக்கு ஜே.எம். 2 கோர்ட்டில் நீதிபதி ராஜ்குமார் முன்னிலையில் இடைத்தரகர் சுகேசை டெல்லி போலீசார் ஆஜர் படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் அடுத்த மாதம் 12-ந்தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதனையடுத்து சுகேசை பாதுகாப்புடன் போலீசார் திகார் சிறைக்கு அழைத்து சென்றனர்.
Tags:    

Similar News