செய்திகள்

செந்துறை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

Published On 2017-09-26 20:32 IST   |   Update On 2017-09-26 20:32:00 IST
செந்துறை அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங்கைச்சேரி கிராமத்தில் செந்துறை அ.தி.மு.க. பிரமுகர் கொளஞ்சிநாதனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. இந்நிலையில் அந்த கட்டிடத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்போவதாக கிடைத்த தகவலை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே நேற்று டாஸ்மாக் ஊழியர்கள் மதுப்பெட்டிகளை கொண்டு வந்து விற்பனை செய்தனராம். இதையறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் அங்கிருந்து மதுபாட்டில்களை எடுத்து சென்றனர். மீண்டும் கடை திறக்க முயற்சித்தால் கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று இலங்கைச்சேரி பொது மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசாரும் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Similar News