செய்திகள்

திருமானூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருடன் பொதுமக்கள் உண்ணாவிரதம்

Published On 2017-09-23 21:41 IST   |   Update On 2017-09-23 21:41:00 IST
சாலை வசதி கோரி திருமானூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமானூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள விழுப்பணங்குறிச்சி கிராமத்தில் வடபுறம் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். காலங்காலமாக அப்பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு இதுநாள் வரை சாலை வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாய் இந்த சாலை உருக்குலைந்து விடுகிறது. மேலும், இங்கு உள்ள மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இச்சாலை வழியாக வாகனங்களில் செல்பவர்களும் சிரமப்படுகின்றனர். இதனால் அங்கு வசித்து வரும் மக்கள் சாலை வசதி கேட்டு பல முறை அரசிடம் மனு கொடுத்தும், போராடியும் இதுவரை சாலை வசதி செய்யவில்லை.

இந்நிலையில் திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விழுப்பணங்குறிச்சியில் வசிக்கும் அந்த குறிப்பிட்ட சமுதாய மக்கள் சாலை வசதி கேட்டு அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருடன் இணைந்து நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் ஜெயலெட்சுமி, வளர்மதி, கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் உலகநாதன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய துணைச்செயலாளர்கள் பன்னீர்செல்வம், கலியபெருமாள், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பரிசுத்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News