செய்திகள்

கறம்பக்குடியில் குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2017-09-17 17:01 GMT   |   Update On 2017-09-17 17:01 GMT
கறம்பக்குடியில் குடிநீர் கேட்டு ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி:

கறம்பக்குடி அருகே பிலாவிடுதி ஊராட்சியை சேர்ந்தது ஆண்டான் தெரு. இங்கு சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக ஆண்டான்தெரு பகுதியில் குடிநீர் சரிவர வினியோகம் ஆகவில்லை. இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கறம்பக்குடிக்கு காலிக்குடங்களுடன் வந்தனர். பின்னர் கறம்பக்குடி ஒன்றிய அலுவலகம் முன்பு கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி ஒன்றிய ஆணையர் சதாசிவம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் மற்றும் போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
Tags:    

Similar News