செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை- மகன் பலி

Published On 2017-09-07 11:46 GMT   |   Update On 2017-09-07 11:46 GMT
ஜெயங்கொண்டம் அருகே இன்று அதிகாலையில் மின்சாரம் பாய்ந்து தந்தை -மகன் பலியாகினர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விக்கிரமங்கலம் சாத்தம்பாடியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 90). இவரது மகன் தங்கராசு (60). இருவரும் விவசாய தொழில் செய்து வந்தனர்.

இவர்களுக்கு அதே பகுதியில் சொந்தமாக கத்தரிக்காய் தோட்டம் உள்ளது. நேற்று அந்த தோட்டத்திற்கு 2 பேரும் சென்றனர். பின்னர் தோட்டத்தில் வேலை பார்த்து விட்டு மாடுகளுக்கு புல் அறுத்து கட்டு கட்டினர்.

பின்னர் புல் கட்டை தோட்டத்தில் அங்கேயே வைத்து விட்டு வீடு திரும்பினர். இன்று அதிகாலை 6 மணிக்கு புல் கட்டை எடுக்க தோட்டத்திற்கு வேலாயுதமும் அவரது மகன் தங்கராசுவும் சென்றனர்.

அப்போது வேலாயுதம் தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை எதிர் பாராதவிதமாக மிதித்து விட்டார். அவரை மின்சாரம் தாக்கியது. உடனே அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு தங்கராசு அங்கு ஓடி வந்து தந்தை வேலாயுதத்தை தொட்டார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தந்தை- மகன் 2 பேரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் விக்கிரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்சாரம் தாக்கி பலியான வேலாயுதம், தங்கராசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News