செய்திகள்

தமிழக அரசு அளித்த ரூ.7 லட்சம் நிதியுதவியை வாங்க மறுத்த அனிதா குடும்பத்தினர்

Published On 2017-09-03 15:37 IST   |   Update On 2017-09-03 15:37:00 IST
தற்கொலை செய்த அனிதாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு வழங்கிய 7 லட்சம் ரூபாய் நிதியுதவியை அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர்.
அரியலூர்:

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனது மருத்துவக் கனவு தகர்ந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு மாநிலம் முழுவதும் மாணவர்களும் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 7 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. இந்த தொகைக்கான வரைவோலையுடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா இன்று அனிதாவின் வீட்டிற்குச் சென்றார்.

அங்கு அவரது குடும்பத்தினரிடம், அரசு அறிவித்துள்ள 7 லட்சம் ரூபாய் நிதியுதவிக்கான வரைவோலையை கொடுத்தார். ஆனால், மகளை இறந்த வேதனையில் இருந்த குடும்பத்தினர் அந்த வரைவோலையை வாங்க மறுத்துவிட்டனர்.

அனிதாவின் உறவினர்களிடம் இந்த நிதியுதவியை பெற்றுக்கொள்ளுமாறு ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், நிதியுதவி பெற்றுக்கொள்ள முடியாது என உறவினர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

நீட் விவகாரத்தில் அரசு சாதகமாக முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் அரசு நல்ல முடிவை அறிவித்த பின்னர் இந்த நிதியுதவியை பெற்றுக்கொள்வதாகவும் அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் கூறினார். மேலும், தன் தங்கைக்கு ஏற்பட்ட நிலைமை பிற மாணவர்களுக்கு ஏற்படக்கூடாது என்றும் அவர் கூறினார்.

Similar News