செய்திகள்

நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும்: குழுமூரில் போராட்டம் தீவிரம்

Published On 2017-09-02 21:38 IST   |   Update On 2017-09-02 21:38:00 IST
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி அனிதாவின் சொந்த ஊரான குழுமூரில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.
அரியலூர்:

‘நீட்’ தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அரியலூர் மாவட்ட மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் நேற்று தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தற்கொலை செய்த அனிதாவின் உடல் அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் தந்தை சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சொந்த ஊரான குழுமூர் கிராமத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று இரவு இறுதிச்சடங்கு முடிந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில், குழுமூரில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

அவர்களை அமைதியாக கலைந்து செல்லும்படி காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். ஆனால், மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என தொடர்ந்து முழக்கமிடும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவது தொடர்பாக முதலமைச்சர் உறுதி அளிக்கும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாக கூறினர். இதேபோல் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்று 10 மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

குழுமூரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News