செய்திகள்

சூலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதி தாய் பலி

Published On 2017-08-31 11:31 GMT   |   Update On 2017-08-31 11:31 GMT
சூலூர் அருகே இன்று மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மகன் கண்முன்னே தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

சூலூர்:

கோவை கருமத்தம்பட்டி அடுத்த அருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமாத்தாள் (வயது 60). இவரது மகன் மோகன்குமார் (34), விசைத்தறி உரிமையாளர்.

இந்த நிலையில் வடுக பாளையத்தில் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோகன்குமார் , அவரது தாய் ராமாத்தாள் ஆகியோர் சென்றனர்.

பின்னர் இன்று காலை 8 மணியளவில் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது நால்ரோடு அருகே செல்லும் போது கருமத்தம்பட்டியில் இருந்து அன்னூர் நோக்கி சென்ற ஒரு டிப்பர் லாரி , மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் ராமாத்தாள், மோகன்குமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். அப்போது ராமாத்தாள் மீது டிப்பர் லாரி சக்கரம் ஏறியது.

இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மோகன்குமாரின் வலது கால் துண்டானது. மேலும் ஒரு கையில் எலும்பு முறிந்தது. காயம் அடைந்த மோகன்குமார், தனது கண்முன்னே விபத்தில் தாய் பலியானதை கண்டு கதறி அழுதார். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் கருமத்தம் பட்டி போலீசார் விரைந்து வந்தனர். பலியான ராமாத்தாள் உடலை கருமத்தம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மோகன் குமாரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஊட்டியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் ஜோசப்பை கைது செய்தனர்.

Tags:    

Similar News