செய்திகள்

கல்லீரலை 20 மணி நேரம் பாதுகாக்கும் நவீன எந்திரம்: விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்

Published On 2017-08-30 06:12 GMT   |   Update On 2017-08-30 06:12 GMT
மனித உடலில் இருந்து அகற்றப்படும் கல்லீரலை 20 மணி நேரம் வரை பாதுகாத்து வைக்கும் அதிநவீன தொழில் நுட்பம் வாய்ந்த கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை:

மனித உடலில் இருந்து அகற்றப்படும் உடல் உறுப்புகள் தேவைப்படு வோருக்கு பொருத்தப்பட்டு வருகிறது. அதில் கல்லீரல் மட்டும் அகற்றப்பட்ட 6 மணி முதல் 8 மணி நேரத்துக்குள் வேறு உடலில் பொருத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது பயனற்று வீணாகிவிடும்.

எனவே, அந்த உறுப்பை அதிவேகமாக எடுத்து வந்து தேவைப்படுவோரின் உடலில் ஆபரேசன் மூலம் பொருத்துகிறார்கள். ஆனால் அதை 20 மணி நேரம் வரை பாதுகாத்து வைக்கும் அதிநவீன தொழில் நுட்பம் வாய்ந்த கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இக்கருவியை கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பி.எஸ்.ஜி. சிறப்பு கல்வி நிறுவன பேராசிரியர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

மனித உடலில் இருந்து எடுக்கப்படும் கல்லீரல் எந்திரத்தின் மேல் பகுதியில் உள்ள ஒரு கோப்பையில் பாதுகாப்புடன் வைக்கப்படுகிறது. அந்த கோப்பையின் இருபுறமும் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு முனையில் உள்ள குழாய் வழியாக ஆக்சிஜனுடன் கூடிய ரத்தம் கல்லீரலுக்குள் செலுத்தப்படுகிறது. மற்றொரு முனையில் உள்ள குழாய் வழியாக ஆக்சிஜன் இல்லாத ரத்தம் வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு வெளியேற்றப்படும் இந்த ரத்தம் மற்றொரு டேங்கில் சேகரிக்கப்பட்டு அது மீண்டும் ஆக்சிஜன் கலந்த ரத்தத்துடன் பாதுகாக்கப்படும் கல்லீரலுக்குள் அனுப்பப்படுகிறது. இது போன்று தொடர்ந்து ரத்தம் செலுத்தப்படுவதன் மூலம் கல்லீரல் 20 மணி நேரத்துக்கும் மேல் பாதுகாக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு (2016) லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆர்கனாஸ், என்ற எந்திரத்தை உருவாக்கினர். அதன் மூலம் 24 மணி நேரம்வரை கல்லீரல் பாதுகாக்க முடியும். அதன் அடிப்படையில் தான் இந்த எந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விலையில் அதிக வித்தியாசம் உள்ளது. ஆர்கனாஸ் எந்திரத்தின் விலை ரூ.1 கோடியே 20 லட்சம் முதல் 1 கோடியே 50 லட்சம்வரை விற்கிறது. ஆனால் பி.எஸ்.ஜி. நிறுவனம் தயாரித்துள்ள இக்கருவி ரூ.15 லட்சத்தில் தயாரிக்கப்பபட்டது.

மேலும் இதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை மட்டுமே ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய வேண்டியுள்ளது. ஆனால் ஆர்கனாஸ் ஏந்திரத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வீணாகும் நிலை உள்ளது.

தற்போது மூளைச்சாவு ஏற்படும் நபர்களின் கல்லீரல் தானமாக பெறப்பட்டு அது 0 முதல் 4 டிகிரி செல்சியசில் உறைந்த நிலையில் வைக்கப்படுகிறது. பின்னர் அவசர அவசரமாக தேவைப்படுவோருக்கு பொருத்தப்படுகிறது.

கல்லீரலை மிக குளிர்ந்த சூழ்நிலையில் வைக்கும் போது அதில் சில செல்கள் இறந்து விடுகின்றன. நேரம் செல்ல செல்ல கல்லீரலின் செல்கள், படிப்படியாக இறந்து பொருத்த முடியாமல் பயனற்று போகிறது. அதை தடுக்கவே தற்போது நவீன எந்திரம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் சுவாமிநாதன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.ஜோசப் ஜான், பி.எஸ்.ஜி. சிறப்பு கல்வி நிறுவன பேராசிரியர் டாக்டர் கே.வெங்கட்ராமன் ஆகியோர் இக்கருவியை உருவாக்கினர்.

அதன் பெரும்பாலான பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை. மோட்டார், அல்ட்ரா சவுண்டு சென்சார் கருவிகள் மட்டும் ஜெர்மனி மற்றும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.

Tags:    

Similar News