செய்திகள்

தா.பழூர் அருகே கதண்டுகள் கடித்து 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 25 பேர் காயம்

Published On 2017-07-29 21:43 IST   |   Update On 2017-07-29 21:43:00 IST
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை கதண்டுகள் கடித்ததில் 25 பேர் காயமடைந்தனர்.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் முதல் நிலை ஊராட்சியை சேர்ந்த தாதம் பேட்டை கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் குளங்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணி நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அத்திட்ட தொழிலாளர்கள் அங்குள்ள பொன்னாற்று கரை பகுதியில் முட்களை அகற்றி தீயிட்டு கொளுத்தி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்து திடீரென கிளம்பிய கதண்டுகள் நாலாபுறமும் பரவி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை கடித்தன. இதனால் நிலைகுலைந்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர். அவர்களை கதண்டுகள் துரத்தி, துரத்தி கடித்தன. இதில் காயமடைந்த தாதம் பேட்டை மற்றும் பாலசுந்தர புரம் பகுதிகளை சேர்ந்த பொட்டு (வயது58), இந்திரா காந்தி (40), சின்னையன்(70), மணி(65), வீரம்மாள்(67), நீலாவதி(50), சந்திரலேகா(50) உள்பட 25 பேரை அங்குள்ளவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தா.பழூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

காயமடைந்த தொழிலாளர்களுக்கு, தா.பழூர் வட்டார மருத்துவ அலுவலர் தெட்சிணா மூர்த்தி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை மேற்கொண்டனர். இதில் மேல்சிகிச்சைக்காக மணி என்ற பெண் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலையரசன், ஜாகீர் உசேன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் இளங் கோவன் ஆகியோர் பார்வையிட்டு, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News