செய்திகள்
பண்ருட்டி அருகே கார் மோதி வியாபாரி பலி
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்தார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ளது கொங்கராயனூர். இந்த பகுதியை சேர்ந்தவர் ராஜகிளி (வயது 46). வியாபாரி. இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.
நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் மளிகை பொருட்கள் வாங்க மேல்பாட்டம்பாக்கம் சென்றார். பின்னர் அவர் பொருட்கள் வாங்கி விட்டு ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கொங்கராயனூர் அருகே வந்த போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜகிளி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவரை புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை ராஜகிளி பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் இறந்த ராஜகிளிக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். விபத்து குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.