செய்திகள்

கிழக்கு தாம்பரத்தில் சாலைகளில் ‘திடீர்’ பள்ளம்

Published On 2017-06-25 12:21 GMT   |   Update On 2017-06-25 12:21 GMT
சேலையூர் வேதாசலம் தெரு, உமா தெரு பகுதிகளில் சாலையின் நடுவே ஒரு அடி ஆழத்திற்கு திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இதனை கண்டு பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தாம்பரம்:

கிழக்கு தாம்பரம் சேலையூர் வேதாசலம் நகர், உமா நகர் உள்பட சில தெருக்களில் பாதாள சாக்கடை பணிக்காக குழாய்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது.

இதற்காக தோண்டப்பட்ட சாலையை சீரமைக்க ரூ. 1 கோடியே 60 லட்சத்தை நகராட்சி ஒதுக்கியது. இதையடுத்து புதிய சாலைகள் போடப்பட்டது.

இந்த நிலையில் சேலையூர் வேதாசலம் தெரு, உமா தெரு பகுதிகளில் சாலையின் நடுவே ஒரு அடி ஆழத்திற்கு திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இதனை கண்டு பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சேதம் அடைந்த சாலையில் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் பலர் இருசக்கர வாகனத்தோடு விழுந்து செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறும்போது, ‘நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக இருந்த சாலையை சரிசெய்து புதிய சாலை போட்டதால் மகிழ்ச்சி அடைந்தோம்.

ஆனால் தரமற்ற சாலை போட்டதால் 1 மாதத்தில் பல பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சாலை போடும் போது சாலை தரமாக உள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

ஆனால் அதிகாரிகள் முறையாக பணி செய்யாததால் மக்கள் பணம் வீணாகி வருகிறத. தரமான சாலையை அமைக்க வேண்டும்’ என்றனர்.

Tags:    

Similar News