புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு லாரியில் மதுபாட்டில் கடத்தல்
மதுராந்தகம்:
மதுராந்தகத்தை அடுத்த தொழுப்பேடு சுங்கச்சாவடி அருகே இன்று காலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரியை நிறுத்தினர். உடனே லாரியில் இருந்த டிரைவர் உள்பட 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
சந்தேகம் அடைந்த போலீசார் லாரியில் சோதனை செய்த போது பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்தது. அதனை புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து மதுபாட்டிலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் மதுப்பாட்டில்கள் இருந்தது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும்.
புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்படும் மதுபாட்டில்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. மதுபாட்டில்களை கடத்தி வந்தது யார்? எங்கு கடத்தி செல்லப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.