செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சி இனி தொடர்வது நல்லதல்ல: ஈஸ்வரன் பேட்டி

Published On 2017-06-17 13:47 IST   |   Update On 2017-06-17 13:47:00 IST
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடர்வது நல்லதல்ல என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.
ஈரோடு:

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மாலைமலர் நிருபருக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது.-

ஜெயலலிதா காலத்தில் எப்படி சட்டசபை நடத்தினார்களோ அதே மாதிரி தான் தற்போதும் சர்வாதிகாரத்துடன் சட்டசபையை நடத்துகிறார்கள்.

ஒரு வி‌ஷயத்தை விவாதத்துக்கு கேட்கிறபோது கருத்துக்களே சொல்லக்கூடாது என்று அடக்கு முறையாக வெளியே அனுப்புவது ஏற்புடையது அல்ல. ஜெயலலிதாவுக்கு பிறகும் அந்த கட்சி அதேபோன்று இருப்பது வேதனையாக உள்ளது.

கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் இன்றைக்கு முதல்-அமைச்சராக இருக்கிறார். கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் சபாநாயகராக இருக்கும்போது இவர்கள் எல்லாம் சேர்ந்து ஜனநாயக முறைப்படி சட்டசபையை நடத்தாமல் அடக்குமுறையுடன் நடத்துவது வருத்தமாக உள்ளது.

எம்.எல்.ஏ.க்களுக்கு பண பேரம் பேசப்பட்டது. வீடியோ மூலம் ஆதாரமாக வெளி வந்துள்ளது. கூவத்தூரில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். இது சட்டசபைக்கு தொடர்புடையது.

தேசிய அளவில் இந்த விவகாரம் கரும்புள்ளியாக உள்ளது. எனவே அதை விவாதித்து உண்மையை நிரூபிக்க வேண்டியதுதானே. டி.வி. பேட்டி கொடுத்த எம்.எல்.ஏ.வை சட்டசபையில் பேச வைக்க வேண்டியது தானே.

அதை மறைக்க முயல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று உள்ளது. சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவருக்கு என்ன மதிப்பு உள்ளது என்பதை புரிந்து கொண்டு முதல்வர் சபாநாயகருக்கு எடுத்து சொல்ல வேண்டும்.


சபாநாயகர், முதல்வர் பொறுத்தவரை எப்படியாவது தி.மு.க.வை சபையில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்றுதான் உள்ளனர்.

தினமும் அ.தி.மு.க பற்றி தான் தலைப்பு செய்திகளாக வருகிறது. தினகரன், ஓ.பி.எஸ், இ.பி.எஸ்., தீபா இவர்களை பற்றிதான் தொலைக்காட்சிகளில் ஹாட் நியூசாக வருகிறது. இது மக்களை ஏமாற்றும் செயல். அனைத்தும் சசிகலா, தினகரன் தலைமையில் நடக்கிறது.

ஓ.பி.எஸ்.சை பின்னால் இருந்து இயக்குவது அவர்கள்தான். மக்கள் சசிகலாவையும், தினகரனையும் எதிர்க்கிறார்கள். இதை திசை திருப்புவதற்காகவே ஓ.பி.எஸ்.சை வெளியே போகிற மாதிரி போக வைத்து இயக்குவது அவர்கள்தான். பின்னர் இணைப்பு என்பார்கள்.

எனவே இனிமேலும் தமிழகத்தில் அ.தி.மு.க.ஆட்சி தொடர்வது நல்லதல்ல.

ஜி.எஸ்.டி.வரி குறித்து தெளிவு இல்லை. விவசாயத்துக்கு அடுத்து ஜவுளி தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. எனவே ஜவுளி தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யில் விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News