செய்திகள்

பெருந்துறை அருகே நூற்பாலை தீ பிடித்து எரிந்தது

Published On 2017-06-13 16:31 IST   |   Update On 2017-06-13 16:32:00 IST
பெருந்துறை அருகே நூற்பாலை தீ பிடித்து எரிந்ததில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
பெருந்துறை:

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் அந்த பகுதியில் ஒரு நூற்பாலை (ஸ்பின்னிங் மில்) வைத்து நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் வேலை முடிந்து சென்றுவிட்டனர். மாலை 6.30 மணியளவில் கழிவு பஞ்சு வெளியேறும் இடத்தில் சூடு தாங்காமல் திடீரென தீ பிடித்தது.

பஞ்சில் தீ பிடித்ததால் மள...மள...வென தீ கொளுந்துவிட்டுஎரியத் தொடங்கியது. அங்கு பணியில் இருந்த ஊழியர் இதுபற்றி மில் உரிமையாளருக்குதகவல் கொடுக்க அவர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீயணைப்பு வீரர்கள் தகுந்த நேரத்தில் சென்று தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News