வெள்ளோடு அருகே விபத்து:ஒருவர் பலி
ஈரோடு:
பெருந்துறை அருகே உள்ள தோப்புபாளையத்தை சேர்ந்தவர் அரிச்சந்திரன். இவரது மனைவி ராதாமணி (வயது48). இவர்களுக்கு ரமேஷ் (28) என்கிற மகன் உள்ளார்.
சம்பவத்தன்று ராதா மணியும், ரமேஷூம் வெள்ளோட்டில் இருந்து ஈரோடிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ரமேஷ் ஓட்டினார். அப்போது திடீரென கார் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரத்தில் உள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது.
இதில் ரமேஷூம், ராதா மணியும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த ஆம்புலன்சு மூலம் ராதா மணி, ரமேசை மீட்டு ஈரோடு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து ராதாமணிக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரமேஷ் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.