செய்திகள்

மாட்டுக்கறி போராட்டம்: பெண்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் முறையீடு

Published On 2017-06-01 09:09 GMT   |   Update On 2017-06-01 09:09 GMT
ஐ.ஐ.டி. வளாகத்தில் நடந்த மாட்டுக்கறி போராட்டத்தில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவர் மனுதாக்கல் செய்தார்.
சென்னை:

ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலையிலான முதல் அமர்வில் வக்கீல் பிரணாத் ஆஜராகி கூறியதாவது:-

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டியை சேர்ந்த ஆராய்ச்சி மேற்படிப்பு மாணவர் சூரஜ் தலைமையில் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது ஐ.ஐ.டியில் செயல்படும் ஏ.பி.வி.பி அமைப்பினர் சூரஜ் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத ஐ.ஐ.டி நிர்வாகத்தை கண்டித்தும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர். ஐ.ஐ.டி வளாகத்திற்குள் நுழைய முயன்றனர்.

அப்போது காவல்துறையினர் பெண்களை கடுமையாக தாக்கினர். அதில் ஒரு பெண்ணின் கையை முறித்துள்ளனர். அந்த செயலில் ஈடுபட்ட காவல் துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புகாரை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இதுகுறித்து மனு தாக்கல் செய்யுங்கள். அதை விசாரிக்கின்றோம் என்று கூறினர்.
Tags:    

Similar News