செய்திகள்

பெருந்துறை அருகே மதுக்கடை ஊழியரை தாக்கிய குடிமகன்கள்

Published On 2017-05-30 17:07 IST   |   Update On 2017-05-30 17:07:00 IST
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் பகுதியில் டாஸ்மாக் சூப்பர்வைசரை பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிசென்ற 2 வாலிபர்களை காஞ்சிக்கோவில் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் நால்ரோடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் காஞ்சிக்கோவில், முத்துக்கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி(45) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

இரவு இந்த கடைக்கு கவுந்தப்பாடி தட்டார் பாளையம் பகுதியை சேர்ந்த சேகர்(25) மற்றும் செந்தில்குமார்(27) ஆகிய இருவரும் சரக்கு வாங்குவதற்காக வந்துள்ளனர்.

தனித்தனி பைக்கில் வந்த அவர்கள் இருவரும் தங்களது பைக்கை ரோட்டின் மீதே நிறுத்தி விட்டு இறங்கி வந்துள்ளனர். இதனைகண்ட ரங்கசாமி அவர்களிடம் பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு வருமாறு கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் அருகே ரோட்டில் கிடந்த காலி பாட்டிலை எடுத்து சூப்பர்வைசர் ரங்கசாமியின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. அவர் சத்தம் போடவே, அங்கிருந்து அவர்கள் இருவரும் பைக்குகளில் தப்பிச்சென்றனர்.

தலையில் ரத்தகாயத்துடன் ரங்கசாமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News