செய்திகள்

பெருந்துறையில் குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2017-05-28 21:48 IST   |   Update On 2017-05-28 21:48:00 IST
குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெருந்துறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்துறை:

பெருந்துறை, காந்தி நகரை சேர்ந்தவர் மஞ்சு என்கிற மஞ்சுநாதன். இவரது மனைவி கோமதி (வயது 20).

கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 மாதத்திற்கு முன்பு கோமதி மஞ்சுநாதனுடன் கோபித்து கொண்டு அதே பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.

வீட்டில் உள்ள பெரியவர்கள் கோமதிக்கு புத்திமதி சொல்லி கணவருடன் சேர்ந்து வாழுமாறு கூறினர். ஆனால் கோமதி தன் கணவர் வந்து கூப்பிட்டால் தான் போவேன் என்று கூறியதாக தெரிகிறது.

ஆனால் மஞ்சுநாதன் கோமதியை வரட்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கோமதி கடந்த சில நாட்களாக மன வேதனையுடன் இருந்தாராம்.

சம்பவத்தன்று தற்கொலை முடிவெடுத்த கோமதி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து ஊற்றி தீக்குளித்தார். கோமதியின் அலறல் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

கோமதியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி கோமதி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News