செய்திகள்

கூத்தாநல்லூர் அருகே மதுக்கடையை அகற்ற கோரி நள்ளிரவு வரை சாலை மறியல்

Published On 2017-05-27 14:54 GMT   |   Update On 2017-05-27 14:54 GMT
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே மதுக்கடையை அகற்ற கோரி நள்ளிரவு வரை மனித நேய மக்கள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பாண்டுகுடி என்ற இடத்தில் சாலையோரத்தில் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் மது அருந்துபவர்கள் அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு இடையூறு செய்து வந்தனர். இதனால் இந்த கடையை அகற்ற வேண்டும் என நேற்று முன்தினம் மாலை கடையின் முன்பு திரண்டு மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அவர்களிடம் அதிகாரிகள் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாலை 5 மணி அளவில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரவு 9 மணி வரை அதிகாரிகள் தரப்பில் முறையான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இதனால் சாலை மறியலை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் போராட்டக்காரர்கள் பாண்டுகுடி மதுக்கடையில் இருந்து எழுந்து லெட்சுமாங்குடி 4 வழி சாலையில்  அமர்ந்து மறியலை தொடர்ந்தனர். இந்த மறியல் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்தது. இதனால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வசந்தராதேவி மற்றும் அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாண்டுகுடியில் உள்ள மதுக்கடை இனிமேல் திறக்கப்படமாட்டாது என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News