செய்திகள்

ஈரோட்டில் ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் 8 பவுன் நகை கொள்ளை

Published On 2017-05-26 16:17 IST   |   Update On 2017-05-26 16:18:00 IST
ஈரோட்டில் ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் 8 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி நேற்று முன்தினம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது.

இந்த ரெயிலில் சென்னையை சேர்ந்த மகாராஜன், அவரது மனைவி சரஸ்வதி (வயது 68) ஆகியோர் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர்.

ரெயில் நேற்று முன்தினம் அதிகாலையில் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தது. அதிகாலை நேரம் என்பதால் முன்பதிவு பெட்டியில் பயணிகள் அனைவரும் அசந்து தூங்கி கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் ரெயில் பெட்டியில் ஏறிய மர்மநபர் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்து கொண்டு ஓடினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி திடுக்கிட்டு எழுந்தார். திருடன்...திருடன்... என கத்தினார். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து சரஸ்வதி ஈரோடு ரெயில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓடும் ரெயிலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News