செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1380 கன அடியாக அதிகரிப்பு

Published On 2017-05-23 12:25 GMT   |   Update On 2017-05-23 12:25 GMT
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1380 கன அடியாக அதிகரித்துள்ளாதல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் ஓகேனக்கல் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த தண்ணீர் பாலாறு, செட்டிபட்டி, பண்ணவாடி ஆகிய பகுதிகளை கடந்து கடந்த 21-ந் தேதி மேட்டூர் அணையை வந்தடைந்தது.

நாளுக்கு நாள் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 21-ந் தேதி மேட்டூர் அணைக்கு 154 கன அடியாக இருந்த நீர் வரத்து நேற்று வினாடிக்கு 847 கன அடியாக அதிகரித்தது.

இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 1380 கன அடியானது. அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் மட்டுமே குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது.

அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை விட அணைக்கு வரும் தண்ணீர் அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது.

நேற்று முன்தினம் 19.65 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 19.72 அடியாக அதிகரித்தது. இன்று மேலும் உயர்ந்து 19.95 அடியானது.

கடந்த 5 மாதங்களுக்கு பிறகு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையை நம்பி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News