செய்திகள்

காரைக்குடி லாட்ஜில் வெளிநாட்டு பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது

Published On 2017-05-23 15:57 IST   |   Update On 2017-05-23 15:57:00 IST
காரைக்குடியில் உள்ள ஒரு லாட்ஜில் வெளி நாட்டு பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி:

காரைக்குடி செக்காலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் வெளிநாட்டு பணத்தை வைத்து சிலர் சூதாடுவதாக டி.எஸ்.பி. கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் வடக்கு காவல் நிலைய போலீசார் குறிப்பிட்ட லாட்ஜுக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு 15 பேர் கொண்ட கும்பல் மலேசிய நாட்டின் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அவர்களை போலீசார் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்தனர்.

பிடிபட்டவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 936-ம், மலேசிய பணமான 100 வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டன.

சூதாட்டத்தில் ஈடுபட்ட சேவுகன், சுப்பு, வெங்கடேஷ், கார்த்திக்ராஜா, பழனிச்சாமி உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். சூதாட்டம் நடத்த உடந்தையாக இருந்ததாக லாட்ஜ் மேலாளர் ராஜேசையும் போலீசார் கைது செய்தனர். 16 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Similar News