செய்திகள்

சீராக குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல்

Published On 2017-05-12 22:53 IST   |   Update On 2017-05-12 22:53:00 IST
கள்ளூர் கிராமத்தில் சீராக குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமானூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கள்ளூர் கிராமத்தில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 3 மாதமாக அப்பகுதி பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் அரியலூர்-தஞ்சாவூர் சாலையில் விரகாலூர் பஸ் நிறுத்தம் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்சை மாற்று பாதையில் இயக்க முயற்சித்த போது பஸ்சின் அடியில் சிலர் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சிகள் உதவி இயக்குனர் பழனிசாமி, தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சோமசேகர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், விரைவில் கிராமத்தில் தண்ணீர் உள்ள இடம் கண்டறிந்து ஆழ்துளை கிணறு அமைத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படும். மேலும், கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்குவது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தெரிவிக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

Similar News