செய்திகள்

திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற தாய் வேன் மோதி பலி

Published On 2017-05-11 16:32 IST   |   Update On 2017-05-11 16:32:00 IST
கோபி அருகே மகள் திருமணத்துக்கு திருமண பத்திரிக்கை கொடுக்க சென்ற தாய் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோபி:

ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் சொந்தமாக கார் வாங்கி ஓட்டி வருகிறார்.

இவரது மனைவி பெயர் சுமதி (38). ஈரோடு எல்லப் பாளையத்தில் உள்ள ஒரு அட்டை கம்பெனியில் வேலை பார்த்தார். இவர்களுக்கு பவித்ரா (22). மேனகா (18) என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இதில் மூத்த மகள் பவித்ராவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிக்கை அடிக்கப்பட்டது. பெற்றோர் தங்களின் உறவினர்களுக்கு திருமண பத்திரிக்கை கொடுத்து வந்தனர்.

நேற்று சிவகுமாரும் அவரது மனைவி சுமதியும் மோட்டார் சைக்கிளில் திருமண பத்திரிக்கை கொடுக்க கோபி சென்றனர்.

திருமண பத்திரிக்கை கொடுத்து விட்டு இரவு 9.40மணியளவில் மோட்டார் சைக்கிளில் ஈரோட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். சத்தியமங்கலம் ரோடு எஸ்.பி.நகர் பிரிவு அருகே வந்த போது பின்னால் ஒரு மினி வேன் வந்து கொண்டிருந்தது. உடுமலைபேட்டையைச் சேர்ந்த ஜாபர் அலி என்பவர் ஓட்டி வந்தார்.

திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வேன் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுமதி பரிதாபமாக இறந்தார். கணவர் சிவகுமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News