செய்திகள்

ராணுவத்தின் தலையை பறி கொடுத்து தலைகுனிய வைத்தவர் மோடி: தமிழிசைக்கு ஹசீனாசையத் பதில்

Published On 2017-05-08 13:11 IST   |   Update On 2017-05-08 15:54:00 IST
இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் தலையை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துண்டித்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார் என்று ஹசீனாசையத் கூறினார்.
சென்னை:

இந்திய ராணுவ வீரர்கள் இருவரது தலையை பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துண்டித்து சென்ற விவகாரத்தில் மத்திய மந்திரி ஸ்மிரிதிஇரானி மூலம் மோடிக்கு வளையல் அனுப்பும் போராட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் காங்கிரசார் வளையல்களை சேகரித்தனர். இதை வருகிற 13-ந்தேதி மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் வழங்கும் போராட்டத்தை காங்கிரஸ் நடத்த திட்டமிட்டுள்ளது.

காங்கிரசின் இந்த போராட்டத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். வளையல் அனுப்பி ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.


இதற்கு பதிலளித்து அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளர் ஹசீனாசையத் கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சியின் போது ஒரு ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டதற்கு இப்போதைய மந்திரி ஸ்மிரிதி இரானி பிரதமர் மன்மோகன்சிங்கை வளையல் அணிய சொல்லுங்கள் என்றார். சுஷ்மாசுவராஜ், நாங்கள் ஆட்சியில் இருந்து இருந்தால் 1 வீரரின் தலைக்குப்பதிலாக 10 பேரின் தலையை எடுத்திருப்போம் என்றார்.

இன்று நிலைமை என்ன? ராணுவ வீரர்களின் தலையை பறி கொடுத்து நாட்டை தலைகுனிய வைத்துள்ளார் மோடி. பா.ஜனதா ஆட்சியில் 135 ராணுவ வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்கள். எல்லை பாதுகாப்பு படை வீரர்களை மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்கிறார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையே.

எனவேதான் நீங்கள் சொன்னதையே நாங்கள் திருப்பி சொல்கிறோம். பிரதமரை வளையல் அணிய சொல்லுங்கள். வளையல் தட்டுப்பாடாக இருந்தால் நாங்கள் அனுப்பி வைக்கிறோம் என்று தான் ஸ்மிதிரிஇரானிக்கு அனுப்ப இருக்கிறோம். அவர் பிரதமருக்கு அனுப்பி வைக்கட்டும். அல்லது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News