செய்திகள்

கொடைக்கானலில் பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகள்

Published On 2017-04-10 12:24 GMT   |   Update On 2017-04-10 12:24 GMT
கொடைக்கானலில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை காட்டு பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. வெயில் அதிகமாக உள்ளதால் நீர் நிலைகளும் வறண்டு உள்ளன. இதனால் காட்டு விலங்குகள் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து பொதுமக்களை மிரட்டுவதும் விவசாய நிலங்களில் புகுந்து நாசம் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது. வனத்துறையினர் தொடர்ந்து இவற்றை விரட்டும் பணியில் ஈடுபட்டாலும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.

கொடைக்கானல் பாம்பார்புரம், அப்சர்வேட்டரி, வட்டக்கானல், அட்டக்குடி, இருதயபுரம், பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முட்டைக்கோஸ், பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.

இந்த நிலங்களுக்குள் புகுந்து காட்டுப்பன்றிகள் பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. மேலும் தெரசா நகர் வசந்த நகர், செண்பகனூர், கொய்யாபாறை, ஆனந்தகிரி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

எனவே இதற்கு வனத்துறையினர் நிரந்தர தீர்பு காண வேண்டும். வனத்துக்குள்ளேயே தொட்டி அமைத்து வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகிறது. அவற்றை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். தகவல் கொடுத்தால் வனத்துறையினர் அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவர். வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றனர்.

Similar News