செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பு இல்லை: த.மா.கா. இளைஞர் அணி யுவராஜா பேட்டி

Published On 2017-04-04 17:31 IST   |   Update On 2017-04-04 17:31:00 IST
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பு இல்லை என தமிழ் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தெரிவித்தார்.
ஈரோடு:

தமிழ் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா இன்று ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வு பாடமுறை தமிழக பாட திட்டத்துக்கு எதிர்மாறாக உள்ளது. மேலும் இந்த பாட திட்டம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே உள்ளது. மாணவர்களை பாதிக்கும் இந்த நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகள் முன்பும் த.மா.கா. இளைஞர் காங்கிரஸ் சார்பில் வரும் 7-ந் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்.

மாணவர்களுக்கு உடனடியாக கல்விக்கடன் வழங்க வேண்டும். தமிழக மாவட்ட தலை நகரங்களில் கல்வி கடன் முகாம்கள் நடத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புப்படி 50 சதவீத மது கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வேறு இடங்களில் புதிய கடைகளை திறக்க கூடாது.

தமிழகத்தில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகையில் த.மா.கா. சார்பில் தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் வரும் 11-ந் தேதி முதல் வாரம் இரு முறை பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் இலவசமாக குடிநீர் வழங்கப்படும்.

கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்ற விவசாய கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் நியாயமாக நடக்க வாய்ப்பில்லை. ஒருதலை பட்சமாக தேர்தல் நடக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். லாரி ஸ்டிரைக் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News