செய்திகள்
ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
ஈரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:
ஈரோடு, சூரம்பட்டி, ஜெகனாதபுரம் காலனியை சேர்ந்தவர் சிவா. இவரது மகன் கவுரிபிரசாத் (வயது30). கவுரிபிரசாத் நேற்று இரவு வேலையை முடித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.
சூளை அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராத வகையில் கவுரிபிரசாத் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கவுரிபிரசாத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்காக போராடினார். அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கவுரிபிரசாத்தை சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி கவுரிபிரசாத் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.