செய்திகள்

போடி அருகே கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

Published On 2017-03-16 11:48 GMT   |   Update On 2017-03-16 11:48 GMT
போடி அருகே கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்தால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
போடி:

தமிழகம் முழுவதும் வறட்சி நீடித்து வந்த நிலையில் கடந்த 1 வாரமாக சாரல் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போடி அருகே கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

போடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதி. குரங்கனி, ஊத்தாம்பாறை ஆகிய பகுதிகளில் மழை பெய்தால் கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து இருக்கும். வறண்டு கிடந்த ஆற்றில் கடந்த 2 நாட்களாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த தண்ணீரின் மூலம் போடி, பூதிபுரம், மீனாட்சிபுரம், கோடாங்கிப்பட்டி, தேனி ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. போடி பகுதியிலும் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மா மற்றும் மானாவாரி விவசாயம் செய்து வந்த விவசாயிகள் சுறுசுறுப்பாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மழை தொடர்ந்து பெய்தால் வருங்காலத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு நீங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News