செய்திகள்

இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் நாகை மீனவர்களின் போராட்டம்

Published On 2017-03-14 22:59 GMT   |   Update On 2017-03-14 22:59 GMT
நாகப்பட்டினம் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் 2-வது நாளாக இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவரை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 142 தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க கோரியும் நாகை தலைமை தபால் நிலையம் முன் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதில் இலங்கை கடற்படையை கண்டித்து நேற்று முன்தினம் இரவு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து 2-வது நாளாக நடைபெற்று வரும் போராட்டம் இரவு பாராமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பழையாறு, திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி, தரங்கம்பாடி, நம்பியார் நகர், ஆரிய நாட்டு தெரு, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், வேளாங்கண்ணி, செருதூர், வெள்ளப்பள்ளம், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

மீனவர்கள் போராட்டத்தால் பல கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

Similar News