செய்திகள்

காஞ்சீபுரம் அருகே கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்: பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2017-03-13 14:28 IST   |   Update On 2017-03-13 14:28:00 IST
காஞ்சீபுரம் அருகே கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதலில் வீடுகள் சூறையால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சீபுரம் கிழம்பியில் மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு பவுர்ணமி திருவிழா கொண்டாடப்பட்டது.

பின்னர் சாமி மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சிலர் அமைதியாக சாமியை ஊர்வலமாக கொண்டு செல்லுங்கள் என்று கூறினர். அதற்கு விழா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் 2 தரப்பினர் இடையே மோதல் உருவானது. பின்னர் உருட்டு கட்டையால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் ஒரு தரப்பினர் அந்த பகுதியில் இருந்த சுமார் 20 வீடுகளை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த வாகனங்களையும் தாக்கினர்.

தகவல் அறிந்ததும் பால செட்டிசத்திரம் போலீசார் விரைந்து சென்றனர். போலீசை பார்த்ததும் வீடுகளை சூறையாடியவர்கள் தப்பி ஓடி விட்டனர். இந்த மோதலில் காயம் அடைந்த விழா தரப்பினர் 10 பேரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மோதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்யகோரி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஸ்ரீநாத் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். இதைதொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Similar News