செய்திகள்

திருவண்ணாமலை அருகே கரும்பு கருகியதால் விவசாயி தற்கொலை

Published On 2017-03-12 20:16 IST   |   Update On 2017-03-12 20:16:00 IST
திருவண்ணாமலை அருகே கரும்பு கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த பாவப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 35). விவசாயி. இவருக்கு ஜெயந்தி (30) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் பூபதி கரும்பு பயிரிட்டிருந்தார்.

நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து, பருவமழையும் பொய்த்ததால் கரும்பு பயிர் காய்ந்து கருகியது. இதனால் மனமுடைந்த பூபதி, தனது மனைவியிடம் புலம்பி உள்ளார். மேலும், வாங்கிய கடனை எப்படி திருப்பி செலுத்த போகிறோம்? என்று வருத்தப்பட்டுள்ளார்.

இதே மனநிலையில் இருந்த பூபதி, கடந்த 8-ந் தேதி கரும்பு கருகிய நிலத்திலேயே வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். மயங்கி கிடந்த அவரை, அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பூபதி நேற்று இறந்தார். இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News