செய்திகள்

இரவில் நடுரோட்டில் நடமாடிய யானைகள் போக்குவரத்து பாதிப்பு

Published On 2017-02-22 15:46 IST   |   Update On 2017-02-22 15:46:00 IST
பவானிசாகர் வனப் பகுதியில் இருந்து 2 யானைகள் காட்டை விட்டு வெளியேறி ரோட்டில் நடமாடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் வனப்பகுதிகள் கடும் வறட்சி காரணமாக காய்ந்து போய் கிடக்கிறது. காட்டில் உள்ள யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியே நடமாட தொடங்கி உள்ளது.

நேற்று இரவு 10 மணி அளவில் பவானிசாகர் வனப் பகுதியில் இருந்து 2 யானைகள் காட்டை விட்டு வெளியேறி பவானிசாகர் நால்ரோட்டில் நடமாடியது.

இந்த 2 யானைகளும் நடு ரோட்டில் நின்று கொண்டிருந்தது. இதனால் பவானிசாகர்- பு.புளியம்பட்டி ரோட்டில் இரவு 10 மணிக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு புறமும் வாகனங்கள் அப்படியே முகப்பு விளக்குகளை அணைத்தப்படி நின்றது.

30 நிமிடத்துக்கு பிறகு அந்த 2 யானைகளும் நடு ரோட்டில் இருந்து ரோட்டோரமாக மேயத் தொடங்கியது.

இதையடுத்து போக்குவரத்து மீண்டும் செயல்பட்டது. “இரவு நேரத்தில் யானை உள்பட வன விலங்குகள் ரோட்டில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும்” என வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.

Similar News