செய்திகள்
நிலக்கரி சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் புகை மண்டலமாக காட்சி அளிப்பதை படத்தில் காணலாம்

என்.எல்.சி. நிலக்கரி சேமிப்பு கிடங்கில் 5-வது நாளாக பற்றி எரியும் தீ

Published On 2017-02-18 11:45 IST   |   Update On 2017-02-18 11:45:00 IST
என்.எல்.சி. நிலக்கரி சேமிப்பு கிடங்கில் 5-வது நாளாக பற்றி எரியும் தீயை அணைக்க மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், என்.எல்.சி. அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டனர்.
நெய்வேலி:

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம்-1 ‘ஏ’ பகுதியில் ராட்சத எந்திரங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, சேமிப்பு கிடங்கில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் கடந்த 14-ந் தேதி திடீரென தீப்பற்றியது.

இந்த தீ மளமளவென நிலக்கரி கிடங்கு முழுவதும் பரவி எரியத் தொடங்கியது. இதனால் அந்த பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தொடர் புகையால் சுரங்க பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதாகவும், பணி செய்ய முடியவில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து நேற்று 4-வது நாளாக மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் என்.எல்.சி. டேங்கர் லாரி மூலமும், அதிகாரிகள் அதிக திறன் கொண்ட நீர் தெளிப்பான்கள் மூலமும் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தீயை கட்டுப்படுத்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், என்.எல்.சி. அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், தீ அணையவில்லை. 5-வது நாளாக இன்றும் தீ பற்றி எரிகிறது. அதை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், “சேமிப்பு கிடங்கில் அவ்வப்போது அழுத்தம் காரணமாக ஆங்காங்கே தீ விபத்து ஏற்படுவது நடக்கக்கூடியதுதான். இதனை நீர் தெளிப்பான் மூலமாக கட்டுப்படுத்தி வருகிறோம். விரைவில் தீ முழுவதும் அணைக்கப்படும்” என்றனர்.

Similar News