செய்திகள்

கடம்பூர் அருகே தந்தத்தால் குத்தி தொழிலாளியை தூக்கி வீசிய யானை

Published On 2017-02-16 17:13 IST   |   Update On 2017-02-16 17:13:00 IST
கடம்பூர் அருகே யானை தந்தத்தால் குத்தி தொழிலாளியை தூக்கி வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டி.என்.பாளையம்:

சத்தியமங்கலம் வனப் பகுதியை அடுத்துள்ளது கடம்பூர் வனப்பகுதி. கடம்பூர் அருகே உள்ள பசுவனாபுரம் திப்பநாயக்கனூரை சேர்ந்தவர் மாதப்பன் (வயது 32). தொழிலாளி.

இவர் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 3 மணியளவில் எழுந்து இயற்கை உபாதை கழிக்க வெளியே வந்தார். வீட்டின் முன் வாழை மரங்கள் வளர்த்து வந்தார்.

அவர் வெளியே வந்த சமயம் வனப்பகுதியிலிருந்து வாழை மரங்களை சாப்பிட ஒரு யானை அங்கு வந்தது. திடீரென தன் வீட்டு முன் யானை நிற்பதை கண்டு மாதப்பன் திடுக்கிட்டார்.

அடுத்தக்கனம் அந்த யானை தனது தந்தத்தால் அவரை குத்தி தூக்கி வீசியது. அலறியவாறு அவர் தூரப்போய் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

யானை தந்தத்தால் குத்தியதில் மாதப்பனின் மார்பில் பெரிய ஓட்டை விழுந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Similar News