செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 84 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்

Published On 2017-02-16 13:38 IST   |   Update On 2017-02-16 13:38:00 IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 84 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

2017 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி வரைவுப்பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் கடந்த செப்டம்பர் 1-ந் தேதி முதல் 30-தேதி வரை பெறப்பட்டது.

மொத்தம் 15 லட்சத்து 85 ஆயிரத்து 603 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 15 லட்சத்து 26 ஆயிரத்து 985 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது. இவை கடந்த ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் சேர்க்கப்பட்டுள்ள இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப்பதிவு ஆகியவற்றின் காரணமாக 3 லட்சத்து 84 ஆயிரத்து 369 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது மாவட்டங்களில் இருந்து தரவுகள் தொகுக்கப்பட்டு, புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடுவதற்காக ஒப்பந்த தாரர்களுக்கு அனுப்பப்பட்டது. கடந்த ஆண்டு அச்சிடப்பட்ட அட்டைகள் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

புதிய வாக்காளர்களுக்கு தமிழகத்தில் உள்ள இ.சேவை மையங்கள் மூலம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தில் தங்களின் கைபேசி எண்மை அளித்துள்ள புதிய வாக்காளர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாள எண் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். இந்த அடையாள எண்ணை தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தில் காண்பித்து வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News