செய்திகள்

கேளம்பாக்கம் அருகே தலையில் எடைக்கல்லை போட்டு மனைவி படுகொலை: கணவர் கைது

Published On 2017-02-16 13:00 IST   |   Update On 2017-02-16 13:00:00 IST
கடையை கவனிக்க செல்லாததால் ஆத்திரம் அடைந்த கணவர் தலையில் எடைக்கல்லை போட்டு மனைவியை படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்போரூர்

கேளம்பாக்கத்தை அடுத்த கழிப்பட்டூரில் வசித்து வருபவர் மிச்சல்ராஜ். வீட்டின் அருகே பழைய பொருட்களை வாங்கும் கடை நடத்தி வருகிறார்.

இவருடைய மனைவி மரியரஞ்சிதம் என்ற ஜெயராணி (வயது24). இவர்களுக்கு 2 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆகும்.

நேற்று மாலை கடையை பார்த்துக்கொள்ளும்படி மனைவியிடம் மிச்சல்ராஜ் கூறினார். ஆனால் மரியரஞ்சிதம் குழந்தையை பார்த்துக் கொள்ளும் வேலை உள்ளதால் கடையை கவனிக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இரவு இருவரும் வீட்டில் தூங்கினர். ஆத்திரத்தில் இருந்த மிச்சல்ராஜ் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். நள்ளிரவு 12 மணியளவில் கடையில் இருந்த 25 கிலோ எடைக்கல்லை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி மரியரஞ்சிதம் தலையில் போட்டார்.

இதில் சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து மரியரஞ்சிதம் பரிதாபமாக இறந்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மரியரஞ்சிதம் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் மரியரஞ்சிதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மிச்சல்ராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மனைவியை கொலை செய்ய வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News