செய்திகள்

காதலர் தினம்: ரெயில் முன்பாய்ந்து வாலிபர் தற்கொலை

Published On 2017-02-14 16:08 IST   |   Update On 2017-02-14 16:08:00 IST
சிதம்பரம் அருகே காதலர் தினத்தன்று ரெயில் முன்பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிதம்பரம்:

மன்னார்குடியிலிருந்து ராஜஸ்தான் செல்லும் ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை சிதம்பரத்தை நோக்கி வந்தது. சிதம்பரத்தை அடுத்துள்ள உசுப்பூர் ரெயில்வே கேட் அருகே வந்தபோது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென்று ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவர் உடல் சிதறி பலியானார்.

இதுகுறித்து சிதம்பரம் ரெயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு, தனிப்பிரிவு ஏட்டு பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

ரெயில் முன்பாய்ந்து பலியான வாலிபர் நீல நிறத்தில் ஜீன்ஸ்பேண்ட், வெள்ளை நிறத்தில் டி-சர்ட் அணிந்திருந்தார். அதில் இதயம் படம் வரையப்பட்டிருந்தது. மேலும் ‘போலீசார் என்னை மன்னிக்கவும் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

டி-சர்ட்டில் இதயம் படம் வரையப்பட்டிருந்ததால் காதல் தோல்வியால் காதலர் தினத்தையொட்டி அந்த வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியவில்லை. வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News