செய்திகள்

காதலர் தினம் எதிரொலி: வைகை அணையில் கூடுதல் போலீசார் நிறுத்தம்

Published On 2017-02-14 15:17 IST   |   Update On 2017-02-14 15:17:00 IST
காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வைகை அணையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டத்தில் உள்ள மிகச் சிறந்த சுற்றுலா தலமாக வைகை அணை உள்ளது. இங்கு தினசரி தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இது தவிர வார விடுமுறை நாட்களில் காதலர்கள் வருவதும் உண்டு.

இன்று காதலர் தினம் என்பதால் வைகை அணைப் பகுதிக்கு அதிக அளவு காதலர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 நாட்களாகவே இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணியினர் காதலர்களை கண்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள் வைகை அணைப் பகுதியில் அடிக்கடி நடப்பது உண்டு. எனவே அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் வைகை அணை பகுதியில் இன்று காலை முதல் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான நிலை உருவாகி உள்ளது.

இதே போல ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரி பின்புறமும் காதலர்கள் அதிகம் கூடுவது உண்டு. மேலும் ஆண்டிப்பட்டியில் 2 பூங்காக்கள் உள்ளது. இந்த பகுதிகளிலும் காதலர்கள் சந்தித்து பேசுவார்கள் என்பதால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Similar News