செய்திகள்

ஈரோடு திண்டலில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல்

Published On 2017-02-13 17:42 IST   |   Update On 2017-02-13 17:42:00 IST
ஈரோடு திண்டலில் இன்று குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டல்:

ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள புதுக்காலனி, கீழ் திண்டல், காரப்பாறை போன்ற இடங்களில் கடந்த ஒரு மாதமாக போதிய அளவில் குடிதண்ணீர் கிடைப்பது இல்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) காலை திண்டலில் பொதுமக்கள் திடீர் என்று மறியலில் ஈடுபட்டனர். சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் நடுரோட்டில் உட்கார்ந்து மறியல் செய்தனர்.

இதனால் அந்த வழியாக செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த வழியாக ஏராளமான பள்ளி-கல்லூரிகள் உள்ளன. இந்த பள்ளி-கல்லூரிக்கு மாணவ-மாணவிகளை ஏற்றி சென்ற வாகனங்கள் சாலை மறியலினால் அங்கிருந்து செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன.

இது பற்றி தகவல் கிடைத்தவுடன் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வேறு பாதை வழியாக போக்குவரத்தை மாற்றிவிட்டனர்.

மேலும் மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது குடிதண்ணீர் வினியோகம் செய்ய உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்டது.

Similar News