செய்திகள்

பன்னீர்செல்வம், சசிகலா இருவருக்கும் ஆதரவு இல்லை: திருநாவுக்கரசர்

Published On 2017-02-13 13:45 IST   |   Update On 2017-02-13 13:45:00 IST
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை பன்னீர்செல்வத்துக்கோ, சசிகலாவுக்கோ ஆதரவு இல்லை என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி அணியில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 98 பேர் தான் இருந்தனர். அப்போதைய கவர்னர் 15 நாட்களில் சட்டசபையில் பெரும்பான்மையை காண்பிக்க வேண்டும் என்று தெரிவித்து ஜானகியை முதல்-அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் பெரும்பான்மையை காண்பிக்க முடியாததால் ஜானகியின் ஆட்சி கலைந்தது.

தற்போது இருக்கும் சூழ்நிலை அப்படி அல்ல. தமிழக எம்.எல்.ஏக்கள் சார்பில் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகிய இருவரும் தாங்கள் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்று கவர்னரை சந்தித்துள்ளனர்.

இருவரும் சட்டசபையை கூட்டினால் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே சசிகலா, எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் கொடுத்துள்ளார். கவர்னர் சட்டப்படி செயல்படவேண்டும்.முதல்-அமைச்சரை சட்டப்படி பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கூறும் போது, எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக வந்து தங்களது ஆதரவை தெரிவிப்பார்கள். அப்போது அவர்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்களா? அல்லது சொந்த விருப்பத்தின் பேரில் இருந்தார்களா? என்பது தெரியவரும்.

முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தின் கட்டுப்பாட்டில் தான் போலீஸ் துறை உள்ளது. தேவைப்பட்டால் காவல் துறையை அனுப்பி எம்.எல்.ஏக்களை அழைத்து வர வேண்டியது தானே? அப்படி செய்தால் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் என்று அவர் சொல்லிருப்பது கருத்து தானே. அது அவரது செயல்பாடாக இல்லையே.

தமிழகத்தில் பா.ஜனதா என்ற கட்சி இல்லை. தற்போது அவர்கள் வரவேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். பா.ஜனதா தலைவர்கள் கவர்னரின் காலதாமதம் சரிதான் என்று கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் தமிழகத்தின் ஆட்சியிலும், அ.தி.மு.க கட்சியிலும் பா.ஜனதா தலையிடுகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். ஒரு புறம் சுப்பிரமணியசாமி ஒரு கருத்தை கூறுகிறார். அது பா.ஜனதா கருத்து இல்லை என்று தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா ஆகியோர் தெரிவிக்கின்றனர். பா.ஜனதா கட்சிக்குள்ளேயே கருத்து வேறுபாடு இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி பன்னீர்செல்வத்துக்கோ, சசிகலாவுக்கோ ஆதரவு இல்லை. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் கூறும் போது எங்களிடம் ஆதரவு கேட்பவர்களுக்கு எங்களது கட்சி எம்.எல்.ஏக்களிடமும், தேசிய தலைவர்களிடமும் ஆலோசித்து நிலைப்பாட்டை தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News