செய்திகள்

கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய சிங்கப்பூர் மாப்பிள்ளை - மணப்பெண் புகார்

Published On 2017-02-11 09:54 GMT   |   Update On 2017-02-11 09:54 GMT
கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய சிங்கப்பூர் மாப்பிள்ளை மீது ஆற்காடு மணப்பெண் புகார் அளித்துள்ளார்.
வாலாஜா:

ஆற்காடு கஸ்பா பகுதியை சேர்ந்தவர் மீனா (வயது 24). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பி.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்துள்ளார். மீனாவுக்கு அவரது பெற்றோர் திருமண வரன் தேடினர். அப்போது, ஆற்காடு பகுதியை சேர்ந்த கேசவன் என்பவரின் மகன் மணிகண்டனுக்கு (29) வரன் பொருத்தமாக இருந்தது.

மணிகண்டன் சிங்கப்பூர் கடற்படையில் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இருவீட்டு பெற்றோரும் கூடி பேசி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி மீனாவுக்கும், மணிகண்டனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்து முடித்தனர்.

கடந்த 3-ந் தேதி திருமணம் செய்ய முடிவு செய்தனர். திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது. மாப்பிள்ளை வீட்டார் கேட்ட வரதட்சணை கொடுக்கவும் மீனாவின் பெற்றோர் ஒப்புக்கொண்டனர்.

இதற்கிடையே சிங்கப்பூரில் இருந்து மணிகண்டன் மீனாவிடம் போன் மூலம் பேச ஆரம்பித்தார். ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி மீனா எதிர்கால கனவுகளில் திழைத்தார். இந்த நிலையில் மணிகண்டனுக்கு அதிக வரதட்சணைக்கு வேறொரு வரன் வந்தது.

வரதட்சணைக்கு ஆசைப்பட்டு நிச்சயதார்த்தம் செய்த திருமண ஏற்பாடுகளை நிறுத்தமாறு மணிகண்டன் வீட்டார் தெரிவித்தனர். இதை கேட்டு பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.

கூடுதலாக நகை, பணத்தை கொடுத்தால் மீனாவை திருமணம் செய்து கொள்வதாக சிங்கப்பூர் மாப்பிள்ளை மணிகண்டன் கூறினார். பணத்திற்கு ஏற்பாடு செய்ய தாமதமாகும் என மீனாவின் பெற்றோர் கூறினர்.

இதை ஏற்காத சிங்கப்பூர் மாப்பிள்ளை திருமணத்தை தடாலடியாக நிறுத்தி விட்டார். இதனால் மனமுடைந்த மணப்பெண் மீனா, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சிங்கப்பூர் மாப்பிள்ளை மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News